உன்மீது இணைப்புணர்வு (TRUST) கொள் – இதுதான் அடிப்படை பாடம், பால பாடம். உன்னை நேசிக்க ஆரம்பி. நீயே உன்னை நேசிக்காவிட்டால் வேறு யார் உன்னை நேசிக்கப் போகிறார்கள் ஆனால் நினைவில் கொள். நீ உன்னை மட்டுமே நேசித்துக் கொண்டிருந்தால் உன்னுடைய நேசம் மிகவும் ஏழ்மையானதாக இருக்கும்.

எப்போதாவது ஒருமுறை எப்படியாவது சமுதாயத்தின் பிடியிலிருந்து யாராவது ஒருவர் தப்பித்து விடுகிறார். எப்போதாவது ஒரு முறை ஒருவர் சமுதாயத்தினால் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்கிறார். இது சமுதாயத்தின் ஏதாவது ஒரு தவறாகவோ அல்லது ஒரு பிழையாகவோ இருக்க வேண்டும். இல்லாவிடில் சமுதாயம் உனது வேரை அழிப்பதில், உன் மீது உனக்குள்ள இணைப்புணர்வை அழிப்பதில் வெற்றி பெற்று விடுகிறது. அப்படி அது நடந்துவிட்டால் உன்னால் யாருடனும் இணைப்புணர்வு கொள்ள முடிவதில்லை.

உன்னால் உன்னை நேசிக்க முடியாத போது உன்னால் யாரையும் நேசிக்க முடியாது போய் விடுகிறது. இது நிதர்சனமான சத்தியம், உண்மை. இதற்கு விதிவிலக்கே கிடையாது. உன்னால் உன்னை நேசிக்க முடியும்போதுதான் உன்னால் அடுத்தவரையும் நேசிக்கமுடியும்.

சமுதாயம் தன்னலத்தை கண்டிக்கிறது. அது அதை சுயநலம் என்கிறது, அது அதை கிறுக்குத்தனம் என்கிறது. ஆம், தன்னலம் பேணுதல் கிறுக்குத்தனம்தான். ஆனால் அது தேவையான ஒன்று. அது உன்னைத் தாண்டி செல்லவில்லையென்றால் கிறுக்குத்தனமாகக்கூடும். அது உன்னைப்பற்றி மட்டும் என்று இருக்குமானால் அது ஒருவிதமான சுயநலமாக மாறும். மற்றபடி தன்னலம் தான் மற்ற அனைத்து அன்பிற்க்கும் ஆரம்பம்.

தன்னை நேசிக்கும் ஒரு மனிதன் கூடியவிரைவில் அன்பால் நிறைந்து வழிவான். தன்மீது இணைப்புணர்வு கொண்டிருக்கும் ஒரு மனிதனால் மற்றவரோடு இணைப்புணர்வின்றி இருக்கமுடியாது. அவர்கள் அவனை ஏமாற்றுவார்கள் என்றாலும், அவர்கள் அவனை ஏமாற்றி இருக்கிறார்கள் என்றாலும்கூட அப்படித்தான். ஆம், அவனால் இணைப்புணர்வின்றி இருக்க முடியாது. ஏனெனில் இப்போது அவனுக்கு இணைப்புணர்வு மற்ற எல்லாவற்றையும் விட எவ்வளவு மதிப்புள்ளது என்று தெரியும்.

நீ ஒருவரை ஏமாற்றலாம், நீ அவரை எந்த விதத்தில் ஏமாற்ற முடியும் நீ அவருடைய பொருள் எதையாவது எடுத்துக் கொள்ளலாம், அல்லது அவருடைய பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இணைப்புணர்வின் அழகும் ஆழமும் தெரிந்த மனிதன் இந்த சிறிய விஷயங்களினால் பாதிப்படைய மாட்டான். அவன் உன்னை தொடர்ந்து நேசிப்பான். அவன் உன்மேல் இணைப்புணர்வோடு இருப்பான். பின் அப்போது ஒரு அற்புதம் நிகழும். அவன் சத்தியமாக உன்மேல் இணைப்புணர்வு கொண்டிருக்கும்போது அவனை ஏமாற்றுவது என்பது இயலாத காரியம், கிட்டத்தட்ட முடியாத செயல்.

இது உன் வாழ்விலேயே கூட அன்றாடம் நிகழலாம். நீ யார்மீதாவது இணைப்புணர்வு கொண்டிருந்தால் அப்போது அவர்களுக்கு உன்னை ஏமாற்றுவது உன்னை ஏய்ப்பது சாத்தியமற்ற விஷயமாக இருக்கும்.

ஒரு ரயில்வே நிலையத்தில் பிளாட்பாரத்தில் உன்னருகே உட்கார்ந்து கொண்டிருக்கும் நபர் யாரென்றே உனக்குத் தெரியாது – முற்றிலும் அறிமுகமில்லாத, பரிச்சியமில்லாத நபர் – அவரிடம் நீ, தயவுசெய்து என்னுடைய பொருட்களை பார்த்துக் கொள்ளுங்கள் நான் டிக்கெட் வாங்கவேண்டும் என்று சொல்லிவிட்டு நீ டிக்கெட் வாங்க சென்று விடுகிறாய். நீ அந்த அன்னியனிடம் இணைப்புணர்வு கொள்கிறாய். அவர் உன்னை ஏமாற்றுவது என்பது கிட்டத்தட்ட நடக்காத ஒன்று. நீ அவரியம் இணைப்புணர்வு கொள்ளவில்லையென்றால் அவர் உன்னை ஏமாற்றக்கூடும்.

இணைப்புணர்வில் ஒரு அதிசயம் உள்ளது. நீ அவர் மீது இணைப்புணர்வு இந்த அளவு கொண்டிருக்கும்போது எப்படி அவரால் உன்னை ஏய்க்க முடியும் அவரால் எப்படி அந்த அளவு கீழே தாழமுடியும் அவர் உன்னை ஏய்த்தால் பின் ஒருபோதும் அவரால் அவரையே மன்னிக்க முடியாது.

இணைப்புணர்வு கொள்வதும் இணைப்புணர்வு பெறுவதும் மனிதனின் இயற்கையாகவே உள்ள உள்ளார்ந்த குணம். தான் இணைப்புணர்வு பெறுவதை ஒவ்வொருவரும் ரசிக்கின்றனர். அது மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் ஒரு மரியாதை. மேலும் நீ ஒரு இணைப்புணர்வு கொள்ளும்போது அது ஒரு படி மேல். அவனிடம் உன் இணைப்புணர்வுக்குக் காரணமே இல்லை, இருப்பினும் நீ அவனிடம் இணைப்புணர்வு கொள்கிறாய் எனும்போது நீ அவனை பல படிகள் மேலே உயர்த்துகிறாய். நீ அவனை மிகவும் மதிக்கிறாய், அப்படி இருக்கும்போது அந்த அளவு உயரத்தில் இருந்து தாழ்வது அவனால் இயலாத செயல். அப்படி அவன் தாழ்ந்தால் அவனை அவனால் மன்னிக்கவே முடியாது போகும். அந்த செயலின் குற்றஉணர்ச்சியை அவன் தனது வாழ்நாள் முழுமையும் சுமந்து கொண்டு திரிவான்.

தன்மீது இணைப்புணர்வு கொண்டுள்ள மனிதனுக்கு அதன் அழகு தெரிந்திருக்கும். நீ உன் மீது இணைப்புணர்வு கொள்ளும் அளவு நீ மலர்கிறாய் எனபது தெரியவரும். தளர்வாகவும் செல்லும் வழி செல்லட்டும் எனும் நிலையிலும் இருக்கும் அளவு நீ ஒளி படைத்தவனாகவும் நிலைபெற்றவனாகவும் இருப்பாய், மேலும் அந்த அளவு அமைதியாகவும் சாந்தமானவனாகவும் மௌனமாகவும் இருப்பாய்.

நீ அதிக அளவு மக்களிடம் இணைப்புணர்வு கொள்வது அழகானது. ஏனெனில் நீ எந்த அளவு இணைப்புணர்வு கொள்கிறாயோ அந்த அளவு உனது மௌனம் ஆழமாக செல்லும் உனது சாந்தம் ஆழ்ந்து உனது மையம் வரை செல்லும், இணைப்புணர்வு நீ கொள்ளும் அளவு நீ வளர்வாய். இணைப்புணர்வு கொள்ளும் மனிதன் கூடிய விரைவில் அதன் தர்க்கத்தை அறிந்து கொள்வான். பின் ஒருநாள் அவன் அறியாததுடன் இணைப்புணர்வு கொள்ள முயற்சி செய்தே தீருவான்.

உன்மீது இணைப்புணர்வு கொள்ள முயற்சி செய். – அதுதான் அடிப்படை பாடம், பால பாடம் உன்னை நேசிக்க ஆரம்பி. நீயே உன்னை நேசிக்க வில்லையென்றால் வேறு யார் உன்னை நேசிக்க போகிறார்கள். ஆனால் நினைவில் கொள் – நீ உன்னை மட்டுமே நேசித்தால் அது மிகவும் ஏழ்மையான நேசமாக இருக்கும்.   

THE BOOK OF WISDOM Ch # 3     Q  #  1