ஓஷோவின் விளக்கம் – ஏழு பள்ளத்தாக்குகள் – பகுதி 6

ஓஷோ   மனிதன் கடந்து செல்லும் பாதையில் ஏழு பள்ளத்தாக்குகள் இருக்கின்றன என்று கூறுகிறார். அதைப் பற்றி அவர் கூறுவதன் 6 பள்ளத்தாக்கு தொடர்ச்சி.

ஆறாவது பள்ளத்தாக்கு – மிக ஆழமான பள்ளத்தாக்கு

ஒருவர் மறைந்துவிடுகிறார். ஐந்தாவதில் ஒருவர் மறைந்துவிடுகிறார். ஆறாவதில் ஒருவர் இல்லாமலே போய்விடுகிறார். கடந்த கால நினைவாக மட்டுமே இருப்பதுபோல ஒருவர் மறைந்துவிடுகிறார். ஐந்தாவதில் ஒருவர் இறப்பினுள் நுழைகிறார். ஆறாவதில் இறப்பு நிகழ்ந்துவிடுகிறது, ஒருவர் இறந்தாக வேண்டும், இல்லாமல்
போயாக வேண்டும். அதனால்தான் இது மிக ஆழ்ந்த பள்ளத்தாக்கு என்றழைக்கப்படுகிறது. இது மிகவும் வலி தருவது, ஏனெனில் இது ஆறாவது – இறுதிக்கு முன்னதாக இருப்பது. இல்லாமல் போவதால் வரும் மிகப்பெரிய வலியை ஒருவர் கடந்தாக வேண்டும். இருப்பதால் வரும் உணர்வு ஒன்று, இல்லாமல் போவதால் வரும் உணர்வு ஒன்று இதை யாராலும் நம்பமுடியாது. இந்த முரண்பாடு எல்லையை தொட்டுவிடுகிறது. ஒருவர்
இருக்கிறார் இல்லாமல் போகிறார். ஒருவர் தனது இறப்பைப் பார்க்கிறார் அவருக்கு
இருக்கும் உணர்வும் இருக்கும், இல்லாமலும் போய்விடுகிறார். தன்னைப்
பற்றிய கடந்த கால கருத்து அனைத்துமே அர்த்தமற்று போய்விடுகிறது. தன்னைப்
பற்றிய புதிய கருத்து எழுகிறது. இறப்பு நிகழ்கிறது, அவர் மறைந்துவிடுகிறார்.

இதைத்தான்
கிறிஸ்துவர்கள் சிலுவையில் அறைதல் என்றழைக்கின்றனர். ஏதுமற்ற தன்மை வந்தடைகிறது. ஒருவர் வெற்று வானமாகிறார். இந்துக்கள்
இதை சமாதி என்றும் ஜென் மக்கள் சடோரி என்றும் அழைக்கின்றனர். எதிர்மறையான
விஷயம் குறை கூறுதல். இதை நீ நினைவு கொள்ளுதல் நல்லது. சிலுவையில்
அறைந்தபோது ஜீஸஸ் இரண்டு விதமான நிலைகளையும் எடுத்தார். முதலில் அவர் குறை கூறினார். அவர் வானத்தைப் பார்த்து, ஏன் ? ஏன் நீ என்னை கை விட்டுவிட்டாய் ? நீ ஏன்
என்னை மறந்துவிட்டாய் என்று கேட்டார். இதுதான் எதிர்மறையான விஷயம். அவர்
குறை கூறினார். அவர் இறந்து கொண்டிருந்தார் எந்த உதவியும் வரவில்லை. அவர் சிலுவையில் இருக்கிறார் – அவருடைய மனதின் அடி ஆழத்தில், தன்னுணர்வற்ற
மனதின் அடி ஆழத்தில் கடவுளின் கரம் வந்து சேரும், எல்லாமும் சரியாகிவிடும், அந்த
சிலுவையே ஒரு கிரீடமாகி விடும் அவர் புது தேஜஸுடன் அங்கிருந்து ஜொலிப்போம் என்ற
ஆசை இருந்துகொண்டிருக்கிறது. – இதைப் பற்றி அவருக்கு விழிப்புணர்வு இல்லை. அவர்
வெகு நீண்ட நேரம் காத்திருந்தார். இறுதி கட்டம் வந்துவிட்டது. அவர் அவரது
சிலுவையை சுமந்து வந்தார், எல்லா துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்தார்,
ஆனாலும் அவர் காத்திருந்தார், பொறுமையுடன் காத்திருந்தார் – அது நடந்துவிடும்
என்று அந்த கணத்திற்காக காத்திருந்தார். இப்போது அவரது கரங்களில்
ஆணியடிக்கப்பட்டுவிட்டது. இப்போது இன்னும் சில கணங்கள் தான் அவர்
இறந்துபோய்விடுவார். இப்போது காத்திருக்க நேரம் இல்லை, உதவி இன்னும் வந்து
சேரவில்லை. கடவுள் இன்னும் தெரியவில்லை. அதனால்தான், ஏன் என்னை மறந்துவிட்டாய், ஏன் என்னை கைவிட்டுவிட்டாய் என்று கதறினார். இதுதான் எதிர்மறையான விஷயம். ஜீஸஸ் போன்ற மனிதனுக்கு கூட இயல்பாக நிகழ்வது தான்.

நீ என்னை செய்ய சொன்ன அனைத்தையும் நான் செய்தேன், நீ எனக்கு கொடுத்த கட்டளைகள் அனைத்தையும் ஏற்று அதன்படி நடந்தேன், நான் உன்னை கண்மூடித்தனமாக பின்தொடர்ந்தேன், இதுவா பிரதி பலன் ? இதுவா அந்த நிறைவு என்று கடந்த காலத்தை
நினைத்துப் பார்த்துவிட்டு முறையீடு செய்கிறாய். நேர்மறையான விஷயம் ஆழ்ந்த நன்றி.
அந்த கணத்தில் கடந்த காலத்தை மறந்துவிட்டு எதிர்காலத்தை நோக்கி ஒருவர்
நம்பிக்கையுணர்வுடன் இருப்பார். இறுதிப் பரிட்சை, கடைசி பரிட்சையும் வந்துவிட்டது,
இதுதான் உனது விருப்பம் என்றால் நடக்கட்டும் என்று நன்றியை உணர்வார். இதைத்தான்
ஜீஸஸ் செய்தார். அவர் இரண்டு விதமான மனப்பான்மைகளையும் காட்டினார். முதலில் அவர் எதிர் மறையை காட்டினார், அதுதான் மனிதனுக்குரியது. அவர் அதைக் காட்டியதால்தான் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் மனித குணங்களோடு இருந்தார். அதனால் தான் அவர் மறுபடி மறுபடி நான் மனிதனின் மகன் என்று கூறினார். எத்தனை தடவை அவர் நான் கடவுளின் மகன் என்று கூறினாரோ அத்தனை தடவை நான் மனிதனின் மகன் பூமியின் மகன் என்றும் கூறினார். அவர் காலமற்றவர், காலத்திற்க்குள் வந்தார், அவர் கடந்தவர், இந்த உலகத்திற்க்குள் வந்தார். அவர் இந்த உலகம் மற்றும் கடந்தது இரண்டையும் சேர்ந்தவர். இப்படித்தான் ஒவ்வொரு குருவும் இருக்கின்றனர் – இரண்டுமாக இருக்கின்றனர். ஒரு கால் இந்த உலகத்திலும் மற்றொரு கால் கடந்த்திலுமாக இருக்கின்றனர். சிலுவையில்
அறையப்பட்ட தினத்தன்று எல்லாமும் மறைந்துவிட்ட கணத்தில் ஜீஸஸ் இரண்டு வித மனோ நிலைகளையும் காட்டினார். முதலில் அவர் மண்ணின் மைந்தன் என்ற மனோபாவத்தை காட்டினார். அவர், ஏன் ? ஏன் என்னை கை விட்டுவிட்டாய் ?  நான்
நம்பினேன், பிரார்த்தனை செய்தேன், நல் வாழ்வு வாழ்ந்தேன் – இதுவா கண்ட பலன் ?  இதுவா நிறைவு என்று கேட்டார். ஆனால் உடனடியாக அவர் தான் அந்த புள்ளியை தவற விட்டுவிட்டதை புரிந்துகொண்டார். இதுதான் கடவுளின்
விருப்பம் என்றால் அப்படியே நடக்கட்டும். அவர் சரணாகதியடைந்துவிட்டார். நேர்
மறையானது நன்றியும் சரணாகதியும். ஏன் என்னை கைவிட்டுவிட்டாய் என்று கேட்ட
கணத்திலேயே தான் குறை கூறுவதை, மனித குணத்தை அவர் அடையாளம் கண்டுகொண்டார். அவர் ஒரு மனிதனாய் தனது எல்லையை பார்த்துவிட்டார், அதனால் அதை விட்டுவிட்டார். அவர் சிரித்திருக்கவேண்டும். உடனடியாக அவரது அடுத்த வார்த்தையே இறைவன் சித்தப்படியே நடக்கட்டும் என்று வெளி வந்தது. நன்றி எழுந்தது, சரணாகதி முழுமையடைந்தது. இனி அங்கு வேறேதுமில்லை. ஜீஸஸ் கடவுளின் மகனாகத்தான் இறந்தார். அந்த இடைவெளி மிக மிக சிறியது. ஒரு கணத்தில் மண்ணின் மைந்தனாக இருந்த அவர் தேவ மகனாக மாறினார். குறை
கூறுதல் நம்பிக்கை உணர்வாக மாறிய கணமே அவர் மனிதனிலிருந்து தெய்வமாகிவிட்டார்.
அவர் பிரார்த்தனையாகிவிட்டார். சித்தப்படி நடக்கட்டும் இனி அவர் அங்கில்லை.
இப்போது அவருக்கென்று தனி விருப்பமில்லை.

Source –  The Secret of Secrets   Vol 2 che  #1