ஓ ! கிழட்டுப்பிறவிகளே !

அன்பன்றி வாழ்வில் இருப்பது என்ன?

எதை நாடி உன் வாழ்வை – சுடுகாடுவரை

            இழுத்துக் கொண்டிருக்கிறாய்?

சகோதர சகோதரிகளே! எழுந்து வாருங்கள், வீறு கொள்ளுங்கள்!

நேசியுங்கள் யாரையும். இது ஆபத்துதான்

ஆனால் இதன்பின் நீங்கள் பூமியில் நடக்கப் போவதில்லை.

யார் காலை வாரிவிட முடியும்?

வானவில் அல்லவோ உங்கள் வாசஸ்தலம்,

மேகத்தில் அல்லவோ உங்கள் படுக்கை,

நிலவல்லவோ உங்கள் காதலன் காதலி

அனுதினமும் நட்சத்திர நண்பர்களுடன் அல்லவோ

                        உங்கள் அரட்டை

நீங்கள் அன்பு ரசத்தைக் குடிக்க, குடிக்க……

மேலும், மேலும் தடுமாற்றம் நீங்கி சீரும்,

                  குழப்பம் நீங்கி தெளிவும்,

                  ஏர்மாறு நீங்கி நிலைப்பாடும் அடைவீர்

ஆம்…. இந்தக் கால்பாவாத அன்பு மிதப்பில் கூடத்தான் !

இனி இந்த உலகத்தின் எதுதான்

      உங்களை ஆட்டிப்படைக்க முடியும் ?

சந்தை உலக சாத்தான்கள் உங்களை சபலப்படுத்த

                                    முடியாது,

நீங்கள் அந்தப் போராட்டங்களைப் பார்த்துச் சிரிப்பீர்கள்.

 

அறியாத பிறவிகள்!

அவர்களிடம் கருணை கொள்வோம் !

அவர்களும் தங்கள் நெஞ்சை நிமிர்த்தட்டும்,

அவர்களுக்குள்ளும் சுடுரத்தம் பாயட்டும்,

ஒருநாள் இந்த முழு உலகமும் நேசிக்கப் புறப்படட்டும்,

அந்த நாள்தான்…..எல்லாத்துயரங்களும் துன்பங்களும்,

ஒரேயடியாக ஒரே மூச்சில் ஒழிந்து போகும் திருநாள்

 

ஓ! என் நண்பர்களே !

எனது இதயம் சந்தோஷத்திலும் வேதனையிலும் துடிக்கிறது,

அடைந்ததால் சந்தோஷம், அறியாதவர் குறித்த வேதனை.

எனது இறந்த காலமே! ஓ, என் இறந்த காலமே!

என் மனித நண்பர்களே !

இருட்டுல் திண்டாடாதீர்கள்.

உங்கள் உண்மையான கண்கள் அன்புதான்,

அதைத் திறவுங்கள்!

பேரானந்ததில் நுழையுங்கள் !

அது, இங்கே இதோ இப்போதே !!! 

                                    …………….தொடர்ச்சி அடுத்த இதழில்