வணக்கமும் அன்பும்!

அன்பு நண்பர்களே,

 இந்திய மீடியாக்கள், அதாவது பத்திரிக்கை, டிவி, சினிமா, கதை கட்டுரை  கவிதை எழுதுவோர், சிந்திக்கும் பொறுப்பை தன் தலையில் சுமக்கும் அறிவுஜீவிகள், பண்பாடு கலாச்சாரம் காப்போர், சமூக ஆர்வலர்கள், நல்லொழுக்கம் போதித்து வியாபாரம் செய்யும் பழைய மதத் தலைவர்கள், அவர்களின் புதிய அவதாரமாய் பழைய கள்ளை புதிய மொந்தையில் ஊற்றிக் கொடுக்கும் சாமியார்கள், எதிர்காலம் பற்றியும் இளைஞர்கள் பற்றியும் கவலைப்படும் பெரிசுகள் இப்படி எல்லோரும் ஓஷோவிற்கு சூட்டிய பெயர்கள் இரண்டு. ஒன்று செக்ஸ் சாமியார், இரண்டு பணக்காரச் சாமியார்.

இதற்கு மிக எளிதான காரணம் இருக்கிறது.

மீடியாக்கள் மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியே பிழைக்கும் நிலையில் உள்ளன. அப்படி பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களாக மக்களிடம் உள்ளது எது என்று பாருங்கள். இரண்டே இரண்டுதான். 1.செக்ஸ் 2. பணம்

இவை இரண்டையும் தேடி ஓடும் மக்கள்கூட்டமே இருக்கிறது. அப்போது உங்கள் மீடியா வெற்றியடைய செக்ஸ் செய்தியும் பணத்தைப் பற்றிய செய்தியும் பரபரப்பூட்டும் விதத்தில் வெளியிடப்பட வேண்டும். இதற்கு வாய்ப்பாக ஓஷோ இந்த இரண்டு விஷயங்களை பற்றியும் ஒரு புதிய அணுகுமுறையைக் கூறுகிறார்.

இந்த இரண்டுமே நமது மக்களை காலங்காலமாக அடிமைப்படுத்தியும், சிறுமைப்படுத்தியும் வந்துள்ளதை ஆராய்ந்த ஓஷோ அதைத் தெளிவுபடுத்தி அதற்கான தீர்வையும் முன் வைக்கிறார். இதுதான் நமது மீடியாக்களுக்குக் கிடைத்த வாய்ப்பு. அவரது தீர்வை அலசி ஆராய்ந்து பாகுபடுத்திப் பார்க்கும் ஆழமும் தெளிவும் நேர்மையும் நமது மீடியாக்களுக்கு இல்லை. மாறாக அதை தனது வியாபாரத்திற்கு பயன்படுத்தித் கொள்ளும் சிறுபிள்ளைத்தனமே இருக்கிறது. என்ன செய்ய. சரி, இப்போது ஓஷோவின் தீர்வை, அணுகுமுறையை நாமாவது நேர்மையாகஆராய்வோம். முதலில் செக்ஸ் …………………..

செக்ஸ் என்பது என்ன இது இனக்கவர்ச்சி. இது இயற்கையானது. இது இயல்பானது. இது பிறப்போடு வருவது. இது பசி போன்று உடலின் தேவை. இது இயற்கையின் கட்டுப்பாட்டில் இயங்குவது. உனது விருப்பு, வெறுப்பு, நல்லது, கெட்டது, சரி, தவறு போன்ற கருத்துக்களால் கட்டுப்படுத்த முடியாதது. இது இனத்தின் தேவை. இது இயற்கையின் தூண்டல். இது சக்தியின் இயல்பான ஓட்டம். இது பருவத்தின் மலர்ச்சி, இது உடலின் அகத் தூண்டல். இது பசிக்கு அடுத்தது, மிக முக்கியமானது

இதுவே சக்தி ஓட்டமாகவும் வெளிப்பாடாகவும் இருக்கிறது. இயல்பான தளர்வையும் ஆனந்தத்தையும் கொடுப்பதாக இருக்கிறது. இது அடக்கப்படும்போது எப்படி பசியோடிருப்பவன் உணவைப்பற்றியே சிந்தித்துக் கொண்டும் கனவு கண்டு கொண்டும் இருப்பானோ அது போல ஆகிவிடுகிறான் மனிதன். மேலும் அவனது திறமையும் ஆற்றலும் இதை அடையும் வழி நோக்கியே திரும்புகிறது. அவன், விதவிதமான மாற்று வழிகள், குறுக்கு வழிகள், கேடு விளைவிக்கும் வழிகள், வக்கிரங்கள் எனத் திரும்புகிறான். உடலுக்கும் உள்ளத்துக்கும் பெரும் தீங்கு விளைகிறது. அவனது தன்னுணர்வும் உணர்வுக் கூர்மையும் தடம் புரள்கிறது. அது மட்டுமல்ல, சக்தியை இயல்பான வழியில் வெளிப்படுத்தி சந்தோஷத்தை அடைய அனுமதிக்கப் படாத மனிதன் விலங்கை விட மோசமாகிறான்.

மனிதனின் வன்முறைக்கும், கோபத்திற்க்கும், மிக முக்கியமான காரணம் செக்ஸ் அடக்குமுறைதான். தேவையற்ற ஆர்பாட்டம், தினசரி சண்டை, தீராத கடுகடுப்பு, குறை கூறிக் கொண்டே இருத்தல், பொறாமை  இப்படி இந்த மனிதகுலம் செக்ஸ் அடக்குமுறையால் சீரழிந்து கொண்டிருக்கிறது. அதே போல இந்த நிலையைப் பயன்படுத்தி வியாபாரம் செய்து மக்களைச் சுரண்டும் சினிமா, டிவி, பத்திரிக்கைகள், – செக்ஸை அடக்கமுடியா மக்களின் இயலாமையே மூலதனமாய் வைத்து அவர்களை பாவிகளாய் மாற்றி மன்னிப்பும் பிரார்த்தனையும் அபராதமும் விதவிதமாய் வசூலிக்கும் பெரும் நிறுவன மதங்கள், இதை எப்படி அடக்குவது, கட்டியாள்வது, கபடத்தனமாய் செய்வது என சொல்லிக் கொடுக்கும் சாமியார் கூட்டம், மக்களின் இந்த சிறுமைப்பட்ட நிலையில் அவர்களை அடிமைகளாய் நினைத்து அதிகாரம் செய்யும் அரசியல்வாதிகள் இப்படி நீள்கிறது இந்த செக்ஸ் அடக்குமுறை அவலம்.

மேலும் ஒன்றை கவனியுங்கள். பலமற்ற பெரும்பான்மை மக்களுக்கு செக்ஸ் ஒழுக்கம் போதிக்கும் அதிகாரமும் பணபலமும் புகழ்செருக்கும் தனிப்பட்ட ஆற்றலும் கொண்ட இந்தத் தலைவர்களோ, புகழின் உச்சியில், அறிவின் உச்சத்தில் உள்ளவர்களோ, யாராவது செக்ஸ் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பவர்களா என்று பார்த்தால், இல்லை. கடந்த கால மன்னர்கள் முதல் இன்றுள்ளவர்கள் வரை இதுதான் நிலை. அப்படியானால் மக்களை அடிமைப்படுத்த, அவர்களை சக்தியற்றவர்களாய் வைக்க, காலங்காலமாய் செய்த சூழ்ச்சியே இந்த செக்ஸ் அடக்குமுறையோ என்று தோன்றுகிறது.

செக்ஸ் மறுக்கப்படும்போது உன் சக்தியை நீயே அமுக்க முற்படுகிறாய். உன் சக்திஓட்டம் பிளவுபடுகிறது. மேலும் தடுக்கமுடியாமல் சில கணங்களில் தவறு செய்கிறாய் அல்லது செய்ய முற்படுகிறாய். இது குற்றவுணர்ச்சியாய் மாறுகிறது. தாழ்வுணர்ச்சியை இது தூண்டுகிறது. இதனால் சுய கண்டனம் செய்து கொள்பவனாய், பாவியாய், தவறானவனாய், குற்றவாளியாய் உன்னை நீயே உணர்கிறாய். இந்நிலையில் யாராவது உன்னை காப்பாற்றி தூய்மைப்படுத்தி சமூகம் போதிக்கும் நல்லவனாய் ஆக்காதா என்று நீ தலைவனைத் தேடுகிறாய். இந்த உன் நிலைதான் உன்னை ஆள நினைக்கும் அரசியல்வாதிக்கும், சுரண்ட நினைக்கும் வியாபாரிக்கும், தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் அறிவுஜீவிக்கும் தேவைப்படுகிறது.

ஆகவே செக்ஸ் அடக்குமுறை அநியாயமானது. மனித குலத்தின் நன்மைக்கும், உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் எதிரானது. அடக்குமுறை எங்கே உள்ளது நாங்கள் நெறிமுறைப்படுத்துவதைத் தானே செய்துள்ளோம். ஒருவனுக்கு ஒருத்தி, கற்பு நெறி, குடும்பத் தியாகம் என்று நெறிப்படுத்துவதைத் தானே செய்துள்ளோம் என்று மதங்கள் சொல்லலாம்.

ஆனால் இந்த நெறிமுறைதான் சூழ்ச்சி என்கிறார் ஓஷோ. முதலில் இந்த நெறிமுறையை எந்த அதிகாரம் படைத்தவர்களும் பின்பற்றுவதில்லை. புராணங்கள் இதிகாசங்கள் படித்தால் எந்த கடவுளும் இதை பின்பற்றியதாக தெரியவில்லை. வகுத்தவர்களே பின்பற்றாத இந்த நெறிமுறைகள் எதற்கு இதில் ஆயிரத்தோரு ஓட்டைகள். சாதிக்கொரு விதி,மன்னனுக்கு ஒரு விதி, பெண்ணுக்கொரு விதி, பிரம்மசரியம் என்றொரு விதி. இதனால் விளைந்தது என்ன? விலைமாதர் என்ற பெண்மையின் இழிநிலையும் ஓரினச்சேர்க்கையும் எய்ட்ஸ் நோய் பிறப்பும்தான் இந்த பிரம்மச்சரியம் போதித்த மத நெறிகளின் நேரடி விளைவுகள்.

மேலும் கடந்த நூற்றாண்டின் கடைசி பகுதிவரை பெண்களுக்கு செக்ஸூம் குழந்தை பிறப்பும் இணைந்தவைகளாய் இருந்தன. அதனாலேயே பெண்களுக்கு மட்டும் கற்பு கற்பிக்கப்பட்டது. சொத்து தன் வாரிசுக்கே சேர வேண்டும் என்ற ஆணாதிக்க அடிப்படையிலும் பெண்கள் தொடர்ந்த பிள்ளை பேற்றால் உடல் வலுவிழந்ததாலும், தொடர்ந்து குழந்தைகளை பேணும் வேலையிருந்ததால் பொருளாதார வலுவிழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததாலும் பெண்ணை அடக்கி வைக்கும் நெறிமுறை ஏற்படுத்தப்பட்டது. கணவனே கண்கண்ட தெய்வமாம், குடும்பத் தியாக விளக்காம் –

தற்காத்து தற்கொண்டாற் பேணி தகைசான்ற

சொற்காத்து சோர்விலாள் பெண் – ணாம்.

அதே சமயம் கணிகையர், விலைமாதர், கோயில்மகளிர் என பொது சொத்தாகவும் ஆண்களின் வசதிக்கேற்ப நெறிகள் வளைத்து வைக்கப்பட்டன. பட்டுள்ளன.

ஆனால் ஓஷோ சொல்கிறார், கருத்தடை மாத்திரை மனித குலத்தில் ஒரு உண்மையான புரட்சிக்கு வித்திட்டுள்ளது. இனி செக்ஸையும் குழந்தை பிறப்பையும் இணைத்துப் பார்த்து பயப்பட தேவையில்லை. பெண்கள் இனி சுதந்திரமாக வாழலாம். குழந்தைக்கும் தனக்கும் ஆதரவு காட்ட ஒரு ஆண் வேண்டுமே என்று தந்திரம் செய்து வாழ வேண்டிய அவசியமில்லை. தனக்கு குழந்தை வேண்டும், அதற்குரிய வசதியும் வாய்ப்பும் உள்ளது எனும்போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்காக செக்ஸ் இன்றி இருக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தை சுமையாய் அழுத்தமாய் இல்லாததால் அவர்களும் பொருளாதாரத்தில் உயரலாம். இப்படி ஓஷோ கூறியது ஏற்கனவே நிகழ ஆரம்பித்து விட்டது. மேலும் மேலும் பெண்கள் சுதந்திரவுணர்வை அனுபவிக்க ஆரம்பித்து வருகின்றனர். ஓஷோவின் புதிய மனிதனின் தோற்றம் துவங்கி வளர ஆரம்பித்து விட்டது.

இரண்டாவதாக ஓஷோ பழைய நெறிமுறைகள், மனிதனை அடிமைப்படுத்தும், சக்தியிழந்தவர்களாக்கும் சூழ்ச்சியாகவே இருப்பதைக் கூறும் அதே சமயத்தில் ஒரு புதிய அணுகுமுறையை நெறிமுறையைக் கொடுக்கிறார். அது காதல்.

செக்ஸூக்கு அடிப்படை காதலாக இருக்கட்டும். காதல் இருக்கும்வரை செக்ஸ் உறவு கொள்ளுங்கள். காதல் மறைந்துவிட்டால் பிறகு செக்ஸ் உறவு கொள்ளாதீர்கள். காதலற்ற செக்ஸ் உறவு வேசித்தனம் என்கிறார் ஓஷோ – அது கணவன் மனைவியாக இருந்தாலும் சரி. காமம் உங்களை ஆட்டுவிக்காமல் தன்ணுணர்வோடு இருங்கள், காதல் உங்கள் செக்ஸின் அடிப்படையாகட்டும். அப்போது நீங்கள் – காதலில் விழமாட்டீர்கள் மாறாக காதலில் எழுவீர்கள் – என்கிறார் ஓஷோ.

காதல் என்பது ஒரு ஆண் தன்னுள் ஒரு பெண்ணை உணர்வது, ஒரு பெண் தன்னுள் ஒரு ஆணை உணர்வது. இது ஒரு நல்ல ஆரம்பம். பிரபஞ்சத்தையே தன்னுள் உணரும் பரவச நிலைக்கான முதல்படி.

ஆகவே நேர்மையாக தன்னுணர்வோடு வாழுங்கள். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் வரும் கணம்தான் உறவு கொள்ளும் கணம். அதை தன்ணுணர்வோடு ஆனந்தியுங்கள். அனுபவியுங்கள். அதை வியாபாரம் ஆக்காதீர்கள். பாதுகாப்பு ஏற்பாடாக மாற்றாதீர்கள். அதை விலை பேசாதீர்கள். காதல் என்பது ஒரு உணர்வு. அது ஒருவரோடு நின்றுவிட வேண்டிய அவசியம் இல்லை. நின்றுவிடுவது சாத்தியமுமில்லை. காதலை அனுபவிக்க அனுபவிக்க அது பொங்கி பெருகுமே தவிர ஒருவரோடு வற்றி விடாது.

மேலும் தன்ணுணர்வோடு கூடிய காதல் அடிப்படையிலான உண்மையான செக்ஸ் அனுமதிக்கப் படும்போது ஒரு கட்டத்தில் செக்ஸ் மறைந்துவிடும். காதல் அன்பாகவும் நேசமாகவும், கருணையாகவும் வளரும், மலரும், மணம் பரப்பும் என்பதை சுட்டுக்காட்டுகிறார் ஓஷோ. ஆகவே நெறிமுறையற்ற செக்ஸை ஓஷோ போதிக்கவில்லை. மாறாக தியான அனுபவம் பெற உதவும், தன்னுணர்வோடு கூடிய காதலின் அடிப்படையிலான செக்ஸை ஆதரிப்பவர் அவர். அதற்கு செக்ஸை அடக்கும் விதமாக இல்லாமல் குழந்தை முதல் மனிதன் தன் உடலை நேசிக்கும் விதமாகவும் நிர்வாணத்தை அனுபவிக்கும் விதமாகவும் வளர்க்கப்பட வேண்டும். அப்போது தன்னுணர்வோடு கூடிய காதலின் காமம் பரவச நிலைக்கு கூட்டிச்செல்லும்.

திருமணம் என்ற மதக்கட்டுப்பாடு, சட்டக் கட்டுப்பாடு மனித வளர்ச்சிக்கு உதவாது. அதன் தேவை இனி இல்லை. மதமும் சட்டமும் படுக்கையறையை வேவு பார்க்கும் வேலையை விட்டு விட வேண்டும் என்பவர் ஓஷோ. ஆகவே அவரது செக்ஸ் தன்னுணர்வோடும் காதலோடும் உள்ள ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் ஆனந்த அனுபவம்.

அதன் மூலம் மனிதன் தனது உடலிலிருந்து விரிந்து மற்றொரு உடலோடு கலக்கும் முதல் அனுபவத்தைப் பெறுகிறான். நான் என்ற உடல் கடந்து விரிந்து மற்றொரு உடலில் கரையும் அனுபவம் இது. இதுவே பிரபஞ்சவுணர்வுக்குள் கரைவதற்கான தேடலின் ஆரம்பம். இந்த ஒரு துளிச்சுவையே ஆன்மீக உலகத்தின் துவக்கம்.

எனவே ஓஷோ கூறுவதில் உள்ள உண்மையையும் நேர்மையையும் உணர்ந்து, அதை நடைமுறை படுத்த என்ன செய்ய வேண்டும், அது ஆரோக்கியமாக நிகழ அனுமதிக்க சமுதாயத்தில் என்னென்ன நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும், கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும், பெற்றோர்களின் புரிதலை மாற்றியமைக்க வேண்டும், இளைய சமுதாயத்திடம் தன்னுணர்வை வளர்த்துக் கொள்ளும் தியான யுக்திகளை கொண்டு செல்வது எப்படி என்று ஆராய்ந்தறிந்து ஆவண செய்ய வேண்டிய பொறுப்பு நம்முடையது.

அதை விட்டுவிட்டு நமது செக்ஸ் வக்கிரங்களுக்கும் அடக்கி வைக்கப்பட்ட செக்ஸின் வடிகாலாய் நாம் போடும் ஆட்டங்களுக்கும் அவரை பயன்படுத்திக் கொள்ள முயல்வது நமது கயமைத்தனத்தின் வெளிப்பாடே அன்றி வேறல்ல.

ஆகவே காதலாகிக் கசிந்துருகி கண்ணீர்மல்கி கரைந்து வாழும் அனுபவம் பெறுவீர்களாக.

அன்பு,
சித்.