மலர்தல்

உனக்குள் மலர்கள் விரிந்து மணம் பரப்புவதை பார்த்த நாளில் இருந்துதான் ஆன்மீகம் என்ற ஒன்று இருப்பதை நீ அறிந்துகொள்கிறாய். மேலும் அது ஒரு இலக்கு அல்ல. மரங்கள் எந்த இலக்கை நோக்கியும் வளர்வதில்லை. மலர்ந்து மணம் பரப்புவதன் மூலம் இயற்கையோடு முழுமையாக கரைந்து கலந்து விடக் கூடிய அவற்றின் உள்ளே உள்ளார்ந்து மறைந்து உள்ள சக்தியை வெளிக் கொண்டு வரவே அவை வளர்கின்றன. பிரபஞ்சத்திற்கு எந்த இலக்கும் இல்லை. அது வெறுமனே மலர்ந்து மணம் பரப்புகிறது.

 

நீ உனது பொறுப்பை புரிந்து கொண்ட வினாடியில் நீ மலர ஆரம்பிக்கிறாய்.

 

உன்னுடைய ஆயிரம் இதழ் கொண்ட தாமரை விரிவதுதான் பேரானந்தம். அது உன் உள்ளார்ந்த இயல்பு.

 

உன்னைச் சுற்றிலும் மலரும் கண்ணுக்குத் தெரியாத மலர்கள் அனைத்தையும் சேகரி.

 

உன்னுடைய உடல் உனது வேர், உனது தன்னுணர்வு உனது மலர்ச்சி.

 

இறப்பு எங்கிருந்தோ வருவதல்ல, அது உன்னுள் வளர்வது. அது உனது மலர்ச்சி.

 

ஞானமடைதல் என்பது உனது தன்னுணர்வு மலர்தலே.

 

காலமற்ற தன்மை

 

மனம் குறுகியது. ஆகவே அது பிரிவுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. மனதின் திரையில் அப்போது தோன்றும் கணத்தை நிகழ்காலம் என்றும், மனதின் திரையை விட்டு போய்விட்ட கணம் கடந்த காலம் என்றும், இன்னும் வராதது எதிர்காலம் என்றும் மனம் பிரித்துவைத்துள்ளது. ஆனால் எதுவும் இயற்கையை விட்டு வெளியே போவதும் இல்லை. இயற்கைக்குள் உள்ளே வருவதும் இல்லை. காலம் என்பது தவறான கற்பனை. காலமற்ற தன்மையே உண்மை.

 

தன்ணுணர்வு காலத்தை கடந்தது, தன்ணுணர்வுக்கு காலம் கிடையாது.

 

மௌனம், மனமற்றநிலை, காலமற்ற தன்மை ஆகியன தியானத்தின் மூலமே நிகழும்.

 

தன்னுடைய இருப்பினுள் நகரும் மனிதன் காலத்தை கடந்து விடுகிறான்.

 

காலத்தை கடந்து உணர்வது இறப்பற்ற தன்மையை உணர்வதுதான்.

 

காலத்தை கடந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுகிறாய்.

 

தர்க்கம் நேரத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. அன்புக்கு கால நேரம் கிடையாது. அன்பு காலமற்ற தன்மையில் செயல்படுகிறது.

 

கொண்டாட்டம்

 

மலர் பூச்சொரிந்து கொட்டுகிறது. அது தொடர்ந்து சொரிகிறது. அவை நிறுத்துவதேயில்லை. இயற்கை இதுவரை நிகழ்ந்த புத்தர்களுக்கும் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் புத்தர்களுக்கும் இனி நிகழப் போகும் புத்தர்களுக்கும் சேர்த்து அளவற்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இயற்கையை பொறுத்தவரை கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்றெல்லாம் கிடையாது. இப்போது என்பது மட்டுமே முடிவற்றது, இப்போது மட்டுமே இருக்கிறது.

 

உண்மையான மௌனம் உன்னுள் நிகழ்ந்துள்ளது என்பதற்கான சான்றே கொண்டாட்டம்தான்.

 

நீ என்ன செய்தாலும் அதை அனுபவித்து, கொண்டாடி, அன்போடு செய்தாலே படைப்பதாகும்.

 

உன்னுடைய வாழ்க்கை ஒரு கொண்டாட்டமாக இருந்தால் இறப்பு அதன் உச்சகட்ட கொண்டாட்டமாக இருக்கும்.

 

நீ நிறைவடைந்ததை, அடைந்ததை நடனமாடி கொண்டாடுவதே கருணையாகும்.

 

இந்த இயற்கை முழுமையும் ஒரு கொண்டாட்டமே, அதன் பாகமாகி விடு.