நண்பா,

 

அன்பின் மணம் வார்த்தை விளையாடல்ல

கனவு காணும் கற்பனையல்ல

 

இது……

மெய்ஞ்ஞானத்தின் விழிப்பு

ஆம்…..

அன்பின் மணம்

தன்னைக் கடந்து பரவ நினைப்பதன்

                  அழைப்பு

எல்லை கடந்து எழ நினைப்பதன்

                  விளைவு

உயிரைக் கரைத்து உயிரைப் பெருக்க விரும்பும்

                  உணர்வு.

இயற்கை தாயின் இதயத்தில் வேர் கொண்டிருக்கும்

                  இயல்பு.

 

 

அது………………..

காமத்தின் துணை

காதலின் கவர்ச்சி

கரைதலின் ஆனந்தம்

கலத்தலின் ஆர்வம்

இழத்தலின் ஆரம்பம்

உயிர்தலின் துடிப்பு

நானென்ற கனவின் எல்லை இழந்து

தானென்ற உணர்வின் மையம் நுழைந்து

பரவசத்தின் நடனத்தில் பங்கெடுக்கும் பாக்கியம்.

 

இன்னும் ஏன் தயக்கம்

இருக்கும் மணத்தை எல்லாம் எடுத்து நுகர்,

உன் இருப்பின் மணத்தை இதயத்திலிருந்து பகிர்

இதுதானே வாழ்க்கை

அல்ல, அல்ல………….

இதுதானே பேரானந்த பெரு வாழ்வு

 

இதற்கு எங்கு போக வேண்டும் நீ

யார் காலில் விழ வேண்டும் நீ

பகுத்தறிவோடு பண்பட்ட பயணமே போதும்.

சிறிது தைரியம், சிறிது தன்னுணர்வு,

      சிறிதே ஆச்சரியம், சிறிதே சிரிப்பு

இப்படி சிறிது சிறிதாய்

உன்னை உணர்வில் இழந்தால்,

            இதயம் திறந்தால்

அன்பு மணம் உன்னிடம் பிறக்கும்

            உலகை மூழ்கடிக்கும்

இதுதானே நமது பிரபஞ்சவுணர்வு

            நமது நன்றியுணர்வு

 

வா, வா……………………

அன்பு மணத்தை நுகர்வோம்

            ஆனந்திப்போம்

      நாமும் பரப்புவோம்

   நானில்லாமல் கரைந்து போவோம்.