நண்பா,

அன்பு அம்பு போன்று இருக்கக் கூடாது,

அது ஆன்மநேயமாக பொங்கிப்பெருக வேண்டும்,

இந்த ஆன்ம நேயமே ஆலயம்.

 

இந்த ஆலயத்தில் நுழைய, எந்த அறிவும் பயிற்சியும்
திறமையும் தேவையில்லை. இதயம் திறந்தால் போதும்.

 

ஆகவே எனதருமை நண்பனே,

உன் பொறாமை, பேராசை, பொய், போலித்தனம்……….

இப்படி ஒவ்வொன்றோடும் சண்டையிட்டு

உன் வாழ்நாளை தண்டித்துக்கொள்ளாதே.

 

அடுத்தவர் உன் முதுகில் ஏற்றியுள்ள சுமை
அதிகம்தான்

சொந்தமும் பந்தமும் சுற்றமும் ஊரும் கொடுத்துள்ள

தொற்றுநோய் முற்றித்தான் உள்ளது.

 

ஆனால்……நம்பிக்கை இழக்க தேவையில்லை……..

 

இதயத்தைத் திறக்க விடாவிட்டாலும்,

இருக்க விட்டிருக்கிறார்கள் உன்னிடமே

 

திற அதை

பிறக்கும் குளிர்நெருப்பு,

ஆம்……அன்பின் கதகதப்பு.

 

அதில் எரியும் உன் சுமைகள்,

அதில் இறக்கும் உன் கிருமிகள்,

நீ பிறப்பாய் நீயாக.

ஆம்…….நீ மலர்வாய் வாழ்வாக….