அன்பர்களே,

தமிழை வளர்க்க வேண்டும் என்றால் அதனை பணம் சம்பாதிப்பதற்கு தேவையான ஒரு மொழி வல்லமையாக மாற்றுவது மட்டுமே நம் முன் இருக்கும் ஒரே வழி.
அதை விடுத்து கந்த சஷ்டி கவசத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதும்
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை நடத்தாமல் மருத்துவமனை கட்டலாம் அல்லது பள்ளிக்கூடம் கட்டலாம் என்று கூப்பாடு போடுவதும் எந்த விதத்திலும் தமிழை வளர்ப்பதாகாது.

கந்த சஷ்டி கவசத்தை விட மோசமான வார்த்தைகள் சித்தர் பாடல்களில் காணப்படுகின்றன. அதே போல் கந்த சஷ்டி கவசம் என்ற வார்த்தையே தூய தமிழ் இல்லை. ஏனெனில் சஷ்டி என்ற வார்த்தை வட மொழியை சார்ந்தது.

அதை தவிர கந்த சஷ்டி கவசம் என்பது முருகனின் அறுபடை வீடுகளுக்குமே தனித்தனியே உள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
அது மட்டுமல்ல பெரியார் தன் அச்சு இயந்திரத்தில் ஏற்பட்ட பிழையின் காரணமாக எழுத்துக்களுக்கு அடுத்து கால் போடும் பழக்கத்தை கொண்டுவந்தார். அது தமிழை மாற்றியது, மேலும் உ. வே. சாமிநாத ஐயர் ஏகப்பட்ட புத்தகங்களை ஓலைச்சுவடிலிருந்து அச்சு கோர்க்க கொண்டுவந்து தமிழுக்கு பெரும் தொண்டு செய்தார். பாரதியார் ஏகப்பட்ட புரட்சிகரமான கவிதைகளை எழுதினார்.

அதுமட்டுமின்றி தேவாரம், திருவாசகம், பாசுரங்கள், என ஏகப்பட்ட புத்தகங்கள் ஏகப்பட்ட வகைகளில் தமிழில் உள்ளன. முக்கியமானதாக திருக்குறளும் உள்ளது.

இவ்வாறு ஏகப்பட்ட புத்தகங்கள் இருந்தும் இன்று தமிழ் வீழ்ந்து கிடப்பதற்கு முக்கியமான காரணம் தமிழை படித்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்ற இன்றைய சமூக அவல நிலை தான்.

அதை மாற்றுவதை தவிர வேறு எதை செய்தாலும் வேறு எதை பற்றி பேசினாலும் அது நேர விரையமாகவும் சக்தி விரையமாகவுமே அது இருக்கும்.

அது மட்டுமின்றி தமிழை முக்கியமான மொழியாக மாற்ற வேண்டு மென்றால், மற்ற மொழிகளில் உள்ள முக்கியமான புத்தகங்கள் அனைத்தையும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்ய மொழி பெயர்ப்பு துறை என்ற பெயரில் ஒரு துறையை உருவாக்கி, அத்துறையில் தமிழ் மற்றும் மற்ற மொழி அறிஞர்களையும் பணியில் அமர்த்தி அவர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரித்து தமிழ் வளர்க்கும் பணியை அரசு செய்தால் அப்போது தமிழ் படித்தால் சம்பாதிக்கலாம் என்ற நிலை உருவாகி அதன் மூலம் தமிழ் வளரும்.

அதனை உருவாக்குவது எப்படி என்று தொழில் முறை புத்தகங்களையும் மற்ற முக்கிய புத்தகங்களையும் தமிழில் மொழி பெயர்ப்பதை அரசு முக்கியமான பணியாக செய்ய வேண்டும் என்று தன்னை தமிழ் தலைவர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்

இதை விடுத்து தமிழ் என்ற பெயரில் வேறு எதை செய்தாலும் வேடிக்கையான கேலி கூத்தாகவே முடியுமே அன்றி உண்மையான தமிழ் வளர்க்கும் வழி ஆகாது

நேசத்துடன்

நிர்தோஷ்.