ஓஷோவின்  – நான் ஒரு அழைப்பு  பேச்சிலிருந்து………..

இந்த பாதிரியார்களும் இந்த குருமார்களும் ‘பாவம் செய்யாதே’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்வதன் அர்த்தம் அதுவல்ல. அவர்களுக்கு மனித மனத்தைப் பற்றி நன்றாக தெரியும், எனவே பாவம் செய்யாதே என்று சொல்லிக் கொண்டே இருந்தால்தான் அவர்கள் பாவம் செய்வார்கள். மக்கள் திடீரென ஒரு விழிப்புணர்வடைந்து இனிமேல் பாவம் எதுவும் செய்வதில்லை என்று முடிவெடுத்து விட்டால் பின்னர் இவர்களது பிழைப்பு என்னாவது? அவர்கள் மிகவும் சிரமப்பட்டு போவார்கள்.

போப் இந்த வருடம் யார் கடவுளிடம் நேரிடையாக பாவமன்னிப்பு கேட்கிறார்களோ அவர்கள் மன்னிக்க முடியாத தவறை செய்கிறார்கள். யாராக இருந்தாலும் சரியான வழிமுறையில்தான் செல்லவேண்டும் என்று அறிவித்தார். சரிதானே, ஒருகால் மக்கள் நேரிடையாக தங்கள் கைகளை உயர்த்தி கடவுளிடம் ‘கடவுளே நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டால் சர்ச் என்னவாகும்? நீ பாவம் செய்துவிட்டு அதற்கான அபராத தொகையாக சர்ச்சுக்கு செலுத்தும் அத்தனை பணமும் பின் எப்படி வரும்?

நான் ஒரு முறை கேள்விப்பட்டேன்.

ஒரு பாதிரியார் ஒரு ரபை-யூதப்பாதிரியார்-யுடன் மிகவும் நட்பாக இருந்தார். அவர்கள் இருவருக்கும் கோல்ப் மிகவும் பிடித்தமான விளையாட்டாக இருந்ததால் அவர்கள் நண்பர்களாகி விட்டனர். அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பாதிரியார் தனது பாவமன்னிப்பு தருவதை முடித்தவுடன் கோல்ப் மைதானம் செல்லலாம் என முடிவு செய்திருந்தனர். ரபை அன்று காத்திருந்தார், மிகவும் தாமதமாகி விட்டது. பாதிரியார் வரவேயில்லை. எனவே அவர் என்னவாயிற்று என பார்ப்பதற்காக சர்ச்சுக்கு வந்தார். உள்ளே வந்தார்.

கத்தோலிக்க சர்ச்சுகளில் பாதிரியார் மூடி திரையிட்ட ஒரு சிறிய ஜன்னலின் பின்னே உட்கார்ந்திருப்பார். அடுத்த பக்கத்தில் யார் பாவமன்னிப்பு கோருகிறார்களே அவர்கள் மண்டியிட்டு உட்கார்ந்திருப்பர். அவர்களுக்கு பாதிரியார் தண்டனை வழங்குவார். ‘பத்து டாலர்கள் சர்ச்சுக்கு தானம் செய். இதுபோல திரும்பவும் தவறு செய்யாதே.’ அடிஆழத்தில் அவன் தினமும் இதே போல தவறு செய்யவேண்டுமென்ற எண்ணம் இருக்கும், இல்லாவிடில் எப்படி சர்ச்சுக்கு பணம் வரும்?

ரபை, ‘மிகவும் லேட்டாகி விட்டது’ என்றார்.

பாதிரியார், “நான் என்ன செய்யட்டும் இன்னும் நீண்ட வரிசை காத்திருக்கிறது, ஆனால் நீங்கள் எனக்கு உதவுங்கள். நீங்கள் இங்கே அமர்ந்து கொள்ளுங்கள், நான் சென்று முகம் கை கால் கழுவி உடை மாற்றிக் கொண்டு வருகிறேன். நீங்கள் பாவமன்னிப்பு கொடுத்துக் கொண்டிருங்கள்” என்றார்.

ரபை, “ஆனால் பாவமன்னிப்பு கொடுப்பது என்றால் என்னவென்று எனக்குத் தெரியாதே” என்றார்.

பாதிரியார், ‘அது மிகவும் சுலபம். அப்போது பாவமன்னிப்பு கேட்ட மனிதன் ஒரு பெண்ணை கற்பழித்து விட்டான். நான் அவனுக்கு பத்து டாலர்கள் அபராதம் விதித்தேன், அது போல ஐந்து அல்லது பத்து டாலர்கள் என அபராதம் விதியுங்கள். அவர்கள் பாவமன்னிப்பு பெற்றுவிட்டதாகவும் திரும்பவும் இது போன்ற தவறு செய்யவேண்டாமென்று சொல்லுங்கள்.” என்றார்.

ரபை, ‘சரி, நான் முயற்சி செய்கிறேன்.’ என்றார்.

அடுத்த பக்கம் இருக்கும் மக்கள் இங்கு நடந்த மாற்றத்தைப் பற்றி அறியவில்லை. பாதிரியார் அங்கு இல்லை, அதற்கு பதிலாக ரபை அங்கு அமர்ந்திருந்தார். ஒருவன் வந்து, “தந்தையே என்னை மன்னிக்க வேண்டும், நான் இந்த வாரத்தில் இரண்டுமுறை கற்பழித்துவிட்டேன்.” என்றான்.

ரபை, “மகனே, கவலைப்படாதே, அந்த அபராத பெட்டியில் முப்பது டாலர்களை போட்டுவிடு.” என்றார்.

அவன், ‘தந்தையே போனமுறை நான் கற்பழித்தேன் என்று சொன்னபோது பத்து டாலர்கள்தானே கேட்டீர்கள். ஏன் அபராததொகை உயர்ந்துவிட்டது” என்று கேட்டான்.

ராபி, “கவலைப்படாதே, பத்து டாலர்கள் முன்கூட்டியே செலுத்தப்பட்டு விட்டதால் நீ இன்னொரு முறை கற்பழித்துக் கொள்ளலாம்” என்றார்.

--

இன்னொரு நிகழ்ச்சி:

ஒரு நிச்சியதார்த்த நிகழ்ச்சியில் நிச்சயம் நடந்து முடிந்த பின் பாதிரியார் தளர்வாக ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.

அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் அவரிடம் வந்து, டீ ஏதேனும் குடிக்கிறீர்களா என்று கேட்டார்.

அதற்கு பாதிரியார், ‘இல்லை, டீ வேண்டாம்’ என்றார்.

“காஃபி குடிக்கிறீர்களா,?”

“இல்லை, காஃபி வேண்டாம்” என்றார்.

‘ஸ்காட்ச் அல்லது தண்ணீர்’ என்று அவர் கேட்டபோது

“தண்ணீர் வேண்டாம்’ என்றார் பாதிரியார்.