தியான யுக்தி – 1

ஒரு கவிதை எழுது 

எப்போதெல்லாம் நீ சோர்வாக உணர்கிறாயோ, எப்போதெல்லாம் இந்த உலகத்தினால்
விரக்தியடைகிறாயோ – இந்த உலகத்தினால் விரக்தியடைவது எல்லோருக்கும் பல முறை
நடக்கக்கூடியதே, அது இயற்கையானது – இந்த உலகம் மிகவும் பளு தருவது,சலிப்பைத்
தருவது, திரும்ப திரும்ப முக்கியமில்லாததை செய்வதால் வரும் மனசோர்வைத் தருவது.
அதனால் எப்போதெல்லாம் நீ இப்படி உணர்கிறாயோ அப்போதெல்லாம் செய்யக் கூடிய மிக
சிறப்பான செயல் என்னவென்றால் எதையாவது படைப்பதுதான். அதில் மூழ்கி விடு. நீ
அதிலிருந்து வெளியே வரும் போது புத்துணர்வு பெற்றவனாய், திரும்பவும் சக்தி
பெற்றவனாய், ஆக்கபூர்வமுள்ளவனாய் வெளி வருவாய்.

கவிதை எழுதுவது தூங்குவதை விட அதிக சக்தி தரும்….. 5 நிமிடங்கள் கவிதை
எழுதுவதில் கவனத்தை செலுத்தினால் அது 8 மணி நேரம் தூங்கி எழும்போது இருப்பதை விட
அதிக ஊக்கம் தரும். 

தியான யுக்தி – 2

காதை உனது இதயத்தோடு இணைத்துவிடு

கேட்கும் சக்தியை இழக்காத யாரும் செவிடல்ல, ஆனால் உன்னிப்பாக கேட்பது என்பது
முற்றிலும் வேறுபட்ட ஒன்று, அது குணத்தளவில் வித்தியாசமானது. அது உனது காதுகளோடு
சம்பந்தப்பட்டதல்ல. அது உனது இதயத்தோடு சம்பந்தப்பட்டது. உனது காதுகளும் உனது
இதயமும் இணையும் போது உன்னிப்பாக கேட்பது நிகழ்கிறது.

தியான யுக்தி  – 3

இது யாருடைய குரல் 

உள்ளிருந்து யாரோ எதையாவது சொல்வது கேட்கும்போது  – அவை நீ எப்படி எப்போது கேட்டாயோ அப்படியே
பதிவு செய்யப்பட்டிருக்கும் – அது யார் என அறிய முயற்சிக்கும்போது நீ
ஆச்சரியப்படுவாய். ‘ஓ,
இது என் அம்மா!.
நான் அவளை பார்த்தே இருபது வருடங்கள் ஆகின்றன. இன்னும் அவள் என்னை ஆட்டிவிக்க
முயற்சிக்கிறாள்’
என சிரிப்பாய். அவள் இறந்து விட்டிருப்பாள். ஆனால் அவள் தன் கல்லறையிலிருந்து
இன்னும் தனது கரங்களை உனது தலை மேல் வைத்திருக்கிறாள். அவளது குறிக்கோள் தவறல்ல,
ஆனால் அவள் இன்னும் உன்னை பிடித்து வைத்திருக்கிறாள்.

தியான யுக்தி  – 4

மனம் சிறிது நேரம் ஓய்வெடுக்கட்டும்

ஒரு நாளில் ஏதாவது சிறிது நேரம் மனம் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும். வேறு எதையும்
முயற்சிக்காதே. உதாரணமாக சாட்சி பாவத்தை உருவாக்குவது போன்ற செயல் எதையும்
செய்யாதே. உனது மனம் ஓய்வெடுக்க அனுமதித்து விடு. ஒரு சமயத்தில் தானாகவே இடைவெளி
உண்டாகும், அந்த இடைவெளியில் சாட்சி பாவம் நிலைபெறும்.