1.

எண்ணங்களை எழுதுவது

கேட்கும் காதுகளையுடைய யாரும் கேட்கலாம், ஆனால் அதற்காக அவர்கள் கவனிக்கவேண்டும் என்பது அவசியமில்லை. கவனிப்பதற்கு கேட்கும் சக்தியுடைய காதுகளுடன் மேலும் ஒன்று தேவை. ஒரு அமைதி, ஒரு மெளனம், ஒரு சாந்தம் – காதுகளின் மூலம் மனம் கேட்ககூடாது, இதயம்தான் கேட்க வேண்டும்.
மனம் நீ செவிடு இல்லை என்றாலும் கூட உன்னை செவிடாக்கிவிடும்- ஏனெனில் மனம் ஒரு பேசும் பெட்டி அது நிறுத்தாமல் தொடர்ந்து அரட்டையடித்துக்கொண்டே இருக்கும்.

முதல் படி உனது அறையில் உட்கார்ந்து கதவுகளை மூடிக்கொண்டு, உனது மனதில் ஓடுவதை அப்படியே எழுது.

என்ன ஓடுகிறது என தெரிந்துகொள்வதற்காக எழுது. ஏனெனில் நீ அதை வேறு யாருக்கும் காட்டப் போவதில்லை. திருத்தாதே. அதனால் என்ன வருகிறதோ அதை அப்படியே எழுது. நீ ஆச்சர்யப்படுவாய். பத்து நிமிடத்திற்குள் உன் புத்தி சுவாதீனத்தில் இல்லை என்பதை நீ பார்ப்பாய். உனது மனம் ஒரு பைத்தியக்காரனின் மனமாக இருப்பதை நீ பார்ப்பாய். எப்படியோ நீ அதை மூடிமறைத்து, உள்ளே என்ன உள்ளதென்று யாரும் பார்க்காமல் சமாளித்து போய்கொண்டிருக்கிறாய். உனது மனதில் உள்ளது என்னவென்று பிறர்க்கு மட்டுமின்றி உனக்கும்கூட தெரியாமல் மறைக்கும் அளவு நீ அதில் திறமைசாலியாகிவிட்டாய். அது தொடர்ந்து போய்கொண்டே இருக்கிறது. யாக்கட்டியாக், யாக்கட்டியாக். இதுபோல் தொடர்ந்து ஓசை எழுப்பிகொண்டேயிருக்கும் மனதினால் நீ செவிடாக இல்லாவிட்டாலும்கூட உன்னால் கவனிக்கமுடிவதில்லை நீ கேட்க மட்டுமே செய்கிறாய்.
கவனிப்பதற்கு ஒரு அமைதியான தொடர்பு சாதனம் தேவை.

THE OSHO UPANISHED
.
 2.

உள் உரையாடல்

எப்போது முடிகிறதோ அப்போது ஒரு மணிநேரமோ அதற்கு மேலுமோ மெளனத்தில் அமர்ந்திரு. உள்ளே உரையாடல் ஓடிக்கொண்டேயிருக்கும். ஆனால் அதில் பங்கெடுத்துக்கொள்ளாதே.

காலம் 6 மாதங்கள்.

சம்பந்தப்படாமல் கவனித்தல்

இரண்டு பேர் பேசுவதை கவனிப்பது போல சம்பந்தப்படாமல் கவனிப்பதுதான் இதன் முக்கியமான பாகம். அதில் சம்பந்தப்படாதே. மனதின் ஒரு பாகம் மற்றொரு பாகத்திடம் சொல்வது என்ன என்று பார். என்ன வந்தாலும் வரட்டும். அதை அடக்க முயற்சிக்காதே. ஒரு சாட்சியாக மட்டும் இரு.
வருடக்கணக்கில் நீ சேர்த்து வைத்த குப்பைகள் வெளிவரும். இந்த குப்பைகளை வெளிவீச மனதிற்கு சுதந்திரம் கொடுக்கப்படவேயில்லை.

பந்தயக்குதிரை –
வாய்ப்பு கிடைத்தவுடன், மனம் கட்டவிழ்ந்த குதிரை போல ஓடும். ஓடட்டும். உட்கார்ந்து கவனி. கவனி. கவனிப்பது மட்டுமே செய். பொறுமையாக உட்கார்ந்திருப்பது ஒரு கலை. நீ குதிரை மீது அமர்ந்து அதை இப்படி அப்படி செலுத்த விரும்புவாய். அது உன் பழைய பழக்கம். இந்த பழக்கத்தை உடைக்க பொறுமையாக இருக்க வேண்டும். அந்த பொறுமையாக இருப்பது எப்படி என்று கற்றுக் கொள். மனம் ஓடும்போதெல்லாம் வெறுமே கவனி. எந்த வகையிலும் குறுக்கிட முயற்சிக்காதே. ஒரு வார்த்தை எழுந்தாலும் அதன் மூலம் மற்றொன்று என ஆயிரம் விஷயங்கள் உள்ளே வந்துவிடும். ஏனெனில் எல்லாமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே.
உன் மனதை வெளியே கொட்டு

சாத்தியப்பட்டால் உனது எண்ணங்களை வெளியே கொட்டு. பேசு. அது இன்னும் அவசியம். அது மேலும் உதவி புரியும். ஏனெனில் நீயும் அதை கேட்கலாம். ஏனெனில் நினைக்கும்போது எண்ணங்கள் மிகவும் மெலிதானவை. உனக்கு அதைப் பற்றி தெளிவாக தெரியாததால் ஒருவிதமான பயம் இருக்கக்கூடும். சத்தமாக பேசு, அதை கவனி, அதைப் பற்றிய விழிப்புணர்வு கொள். அதில் சம்பந்தப்படாமல் பிரிந்து இருப்பதில் கவனமாக இரு. மனதில் இருப்பதை பேசுவதன் மூலம் தெளிவு பெறு. ஆனால் தொடர்பற்று சம்பந்தமில்லாமல் இரு. கெட்ட வார்த்தை வந்தால் ஏசு, பேசு. ஆறு மாதங்கள் பொறுமையாக மனதை காலி செய்வது மிகவும் அவசியம். ஏனெனில் உனது வாழ்க்கை முழுவதும் நீ மனதை எண்ணங்களால் நிரப்புவதை தவிர வேறேதுவும் செய்யவில்லை. பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் செய்தால் மட்டுமே ஆறு மாதங்கள் போதும். இல்லாவிடில் அது ஆறு வருஷங்களோ, ஆறு பிறவிகளோ எடுக்கும். எல்லாமே உன்னைப் பொறுத்தது. நீ எந்த அளவு முழு மனதுடனும் நேர்மையாகவும் இந்த முறையில் முயற்சி செய்கிறாய் என்பதை பொறுத்தது. நீ சாட்சியாக இருக்கிறாய் என்பதை பலமுறை நீ மறந்துபோவாய். குதிரை மீது ஏறி சவாரி செய்ய ஆரம்பித்து விடுவாய். அதில் ஈடுபட்டு, உனது எண்ணங்களின் பயணத்தை ஆரம்பித்துவிடுவாய். நீ ஏதாவது எண்ணத்துடன் உன்னை அடையாளப்படுத்திக் கொண்டு விட்டால் அப்போது நீ தோற்றுப் போய் விட்டாய். அதைப் பற்றி விழிப்புணர்வு அடைந்த கணமே குதிரையை விட்டு இறங்கி, வார்த்தைகளும் எண்ணங்களும் அதை செலுத்தாமல் எங்கே போகுமோ அங்கே போகட்டும். விட்டுவிடு, கவனிப்பதை மட்டுமே செய்.

மெது மெதுவாக நீ மௌனத்தின் மிருதுவான காலடி ஓசையை கேட்க ஆரம்பிப்பாய். கேட்கும் கலையை அனுபவப்படுவாய். காற்று மரத்தில் மோதும் ஒலியை, பூவிதழ்களும் சருகுகளும் உதிரும் ஓசையை நீ கேட்பாய். கடற்கரையில் அமர்ந்தால் அலையின் ஓசையை கேட்பாய். நதியின் ஓட்டத்தை, மின்னலை, இடியோசையை கேட்பாய். பறவைகள் பாடுவதை, குழந்தை அழுவதை, நாய் குரைப்பதை கேட்பாய். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் நீ சப்தத்தை கேட்பாய்.

நீ கேட்பது எப்படி என்ற கலையை கற்றுக் கொண்டு விட்டால் பின் நீ சந்தோஷத்தால் நிறைந்து போவாய், ஏனெனில் நீ அப்போது ஒரு சாட்சியாளன் மட்டுமே. கவனிப்பதே சந்தோஷமானதாக இருக்கும். கவனித்தால் அது தியானமாகும். தியானமாக இல்லாவிடில் நீ கேட்க முடியாது.

THE TRUE SAGE

3.
தந்தி வாக்கியம் போல பேசு

வார்த்தைகளில் உணர்வு வார்த்தைகள், அறிவார்ந்த வார்த்தைகள் என உள்ளன. அறிவார்ந்த வார்த்தைகளை மேலும் மேலும் விலக்கி விடு. மேலும் மேலும் உணர்வுரீதியான வார்த்தைகளை உபயோகப்படுத்து. சமூக வார்த்தைகளும் ஆன்மீக வார்த்தைகளும் உண்டு. சமூக வார்த்தைகளை விடு. பிளவை உருவாக்கும் வார்த்தைகள் உள்ளன. நீ அவற்றை சொன்ன கணமே வாதம் ஆரம்பமாகும். அதனால் தர்க்கரீதியான வாதத்துக்கு அடிகோலும் மொழியை உபயோகிக்காதே. அன்பின் அக்கறையின் கனிவின் மொழியை உபயோகி. அப்போது தகராறு எழாது.

முதல்படி அவசியப்பட்டால் மட்டுமே பேசுதல் தேவைப்பட்டதை மட்டும் பேசுதல்- தந்தி கொடுப்பது போல, பத்து வார்த்தைகளுக்குள் தேர்ந்தெடுத்து பேசு. மக்கள் பேசும்போது கேட்டால் ஆச்சர்யப்படுவாய் எல்லா இடத்திலும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. நீ சொல்வது ஒன்று, வேறொன்று புரிந்துகொள்ளப்படுகிறது. மக்கள் தாங்கள் இப்போது பேசுவதில் ஐந்து சதவீதம் மட்டும் பேசினால் போதும் அந்த ஐந்து சதவீதத்தில் தேவைப்படுவது அனைத்தும் உள்ளடங்கிவிடும். அப்போது இந்த உலகம் இன்னும் அமைதியாகவும் இன்னும் மெளனமாகவும் இருக்கும்.
உன்னுடைய தந்தி என்பது ஒரு கடிதத்தை விட சுருக்கமானதாகவும் பொருள் நிறைந்ததாகவும் இருக்கும். தந்திபோல பேசு, அப்படி பேசினால் நாள் பூராவும் சில தடவைகள் மட்டுமே பேச வேண்டிவருகிறது என்பதை கண்டு நீ ஆச்சர்யப்படுவாய்.

THE GOLDEN FUTURE