“அனந்தோ” – எவ்வாறு தளர்வான முறையில் எந்தவிதமான கருத்துக்களையும்
கொள்ளாமல் பயத்தை எதிர்கொள்வது என்பதை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

எனது வாழ்வில் பயம் மிகப்பெரும் பிரச்னைகளில் ஒன்றாக இருந்தது. ஆனால்
நான் ஓஷோவை சந்திக்கும் வரையில் அது என்னை எந்த அளவு பாதிக்கிறது என்பதைப் பற்றி
விழிப்படையாமல் இருந்தேன்.

நான் வாழ்நாள் முழுவதும் பயத்திலேயே வாழ்ந்தேன். மற்றவர்களைப் பற்றிய
பயம், நான்கு பேர் என்ன சொல்லுவார்கள் என்ற பயம்.

மற்றவர்கள் நான் செய்வதை ஆமோதிப்பார்களா, மாட்டார்களா, என்று சிந்தித்துத் தான் நான் வாழ்நாள் முழுவதும்
காரியம் செய்திருக்கிறேன் என்பதை நான் பின்னாளில் உணர்ந்தேன்.

ஓரேகான் மாவட்டத்தில் உள்ள ரேன்ச்சில் இருந்த ஓஷோவின் சட்ட துறையில்
பணியாற்றிக் கொண்டிருந்த போதுதான் நான் அதைப் பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.
ரேன்ச் என்பது 1980 களில் ஓஷோ அங்கே வாழ்ந்தபோது அவரைச் சுற்றி கூட சேர்ந்து வாழ
ஆரம்பித்த மக்கள் உருவாக்கிய மிகப்பெரிய தனிமனிதகூட்டமைப்பாமாகும். ஒரு வெளிநாட்டுக்காரன்
வந்து தங்கள் நடுவில் உட்கார்ந்துகொண்டு உலகம் முழுவதும் இருந்து வருடம்தோறும்
20,000 மக்களை ஈர்ப்பதை அமெரிக்க அரசாங்கத்தால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. ரெனால்ட்ரீகனின்
இந்த அரசாங்கம்  கிறிஸ்துவ மத வெறிபிடித்தவர்களை அடிப்படையாக கொண்டது, மேலும் அதன்  அரசு வழக்கறிஞரான மோஸஸ் ஒரு வெறிபிடித்தவன். அதனால் அவர்கள் அவர்களிடம் இருந்த அனைத்தையும் எங்கள் மீது எறிந்துகொண்டேயிருந்தார்கள். ஆகவே வக்கீல்களாகிய நாங்கள் அதற்காக வாரத்தில் ஏழு நாட்களும் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலைசெய்ய வேண்டி வந்தாலும் நாங்கள் சலிக்காமல் செய்தோம்.

நான் அமெரிக்க அரசாங்கத்தைக் கண்டு பயப்படவில்லை. அரசாங்கம் ஒருபோதும்
அப்பாவி குடிமக்களை துன்புறுத்தாது என்று மக்கள் எண்ணியிருந்த காலம் அது.
குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரை நான் அப்படித்தான் எண்ணியிருந்தேன். அந்த
நாட்கள் போய்விட்டிருந்தன, ஆனால் எங்களுக்கு அது தெரியவில்லை.

ஆனால் ஒரு சாதாரண பெண்ணுடன் தகராறு செய்துகொள்ள அஞ்சினேன். உண்மையில்
அவள் சாதாரண குடும்பபெண் அல்ல. அவள் ரேஞ்ச்சை கவனித்துக் கொண்டிருந்த இதை
– கட்டுப்படித்துக்கொண்டிருந்த என்று படிக்கவும் – ஷீலாவின் கிச்சன் காபினட் அமைப்பில்
ஒருத்தி. இந்த காபினட் கிறுக்குப் பிடித்தவர்கள். அவர்களிடம் எதையாவது இல்லை
கிடையாது முடியாது என்று சொல்லிவிட்டால் நீ வெளியே வீசப்படுவாய். அவர்கள் இப்படி
செயல்படும் விதத்தை பின்னாட்களில் அறிந்த ஓஷோ அவர்களை முற்றிலுமாக தடுத்து
நிறுத்திவிட்டார், அது முற்றிலும் வேறொரு கதை.

இந்த குறிப்பட்ட பெண், எந்த விதமான சட்ட அறிவும் இல்லாதபோதும் ஒவ்வொரு
நாளும் நாங்கள் செய்வது அனைத்தையும் தெரிந்துகொள்ள விரும்பினாள். நான் செய்வது
அனைத்தையும் என்ன எதற்கு ஏன் என்று விவரிப்பதில் எனது நேரம் வீணாவதை நான் வெறுத்ததோடு, சட்ட நுணுக்கம்
சிறிதும் இல்லாத அவள் கூறும் சாத்தியமில்லாத யோசனைகளையும், நடைமுறை படுத்த முடியாத
கருத்துக்களையும் நான் கேட்க வேண்டி வந்தது எனக்கு கடுப்பை கிளப்பியது.  சில நேரங்களில் இந்த உரையாடல்கள் மணி நேரங்களில் நீளும்போது பின்னர் என்னுடைய உண்மையான வேலையை செய்ய இரவில் சில மணி நேரங்கள்
விழித்திருக்க வேண்டி வந்தது.

நான் என்னுடைய வேலையில் கெட்டிக்காரி. கிடைத்த வெற்றிகள் அதை
நிரூபித்தன. ஆனால் தினமும் இவளை எதிர்கொள்வது என்னுடைய மனதிற்க்கும் என்னுடைய
செருக்கிற்க்கும் நரகவேதனையாக இருந்தது. உண்மையிலேயே இதுதான் பிரச்னையாக
இருந்திருக்கிறது, ஆனால் இதை பார்க்கும் அளவிற்கு எனக்கு அந்த நாட்களில் நேரமும்
இல்லை, அதற்கான அனுபவமும் இல்லை.

அன்று அவள் சாத்தியமில்லாத ஒரு போர்கால நடவடிக்கை ஒன்றை வலியுறுத்தினாள். அது செய்ய முடியக்கூடியது அல்ல. அவளிடமிருந்து விடுபட வேண்டி நான் ஒத்துக்கொண்டேன். பின்பு நான் அது நடைமுறையில் சரிப்படுவராது எனக்கண்டேன். அவள் சொன்னதை செய்வது என்பது என்னைப் பொறுத்தவரை எங்களுடைய வழக்கில் சட்டதற்கொலை போன்றது மட்டுமல்ல, ரேஞ்ச் இப்போதிருக்கும் இருப்பிற்க்கும் தாறுமாறான விளைவை உருவாக்கும். என்னுடைய உச்சகட்ட ஆணவத்தில் இருந்த என்னால் என்னை தாண்டி சென்று அந்த வேலையை செய்ய முடியாது என்பது எனக்கு தெரிந்தது.

இதன் விளைவு என்னவென்றால் நான் எளிதாக வெளியே தூக்கி எறியப்படுவேன்
என்பதுதான். என்னுடைய வேலையிலிருந்து, என்னுடைய வீட்டிலிருந்து, என்னுடைய
காதலரிடமிருந்து, என்னுடைய நண்பர்களிடமிருந்து, – ஏன்
என்னுடைய வாழ்க்கையிலிருந்தே ஏனெனில் ரேஞ்ச் என்பதுதான் எனக்கு எல்லாமே, அதுதான்
என்னுடைய முழு வாழ்க்கையே என்றாகி விட்டிருந்தது. இதை விட மோசமானது என்னவென்றால்
நான் ஓஷோவின் அருகிலிருந்தும் வெளியே வீசப்படுவேன் என்பதுதான்.

அந்த கணத்தில் நான் அதற்குமுன் அனுபவித்திராத பயத்தை அனுபவித்தேன்.
என்னுடைய உடல் முழுவதும் நடுங்கியது, வெலவெலத்துப் போனது. இரவு முழுவதும் தூங்க
முடியாமல் நான் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன்.  அப்போது மேலும் இந்த பரந்த உலகில் ஒரே ஒரு ஆள்
எனக்கு எதிராக திரும்பியதற்க்காக எனக்கு இத்தனை பயம் வந்ததை நான் உணர்ந்த போது
நான் அதிர்ச்சியடைந்தேன்.

அதிர்ஷ்டவசமாக அந்த பெண் ஏதோ வேலையாக அடுத்தநாளே போர்லேண்ட்
போய்விட்டாள். எனவே என்னுடைய மறுப்பு முழுமையாக கண்டுபிடிக்கப்படாமல் போய்விட்டது.
ஆகவே சட்டவாழ்க்கை சாதாரணமாக செல்ல ஆரம்பித்தது. ஆனால் உள்புறத்தில் நான்
பழையமாதிரியான ஆளாக இல்லாமல் மாறிப்போனேன்.

தொடர்ந்த நாட்களில் நான் என்னுடைய பயத்தைப் பற்றி விழிப்புணர்வு
அதிகம் கொள்ள ஆரம்பித்தேன். – அதிகம் நபர்கள் கூடும் இடத்தில் இருக்க எனக்கு
ஏற்படும் பயம் பற்றி, மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றி
எனக்கு ஏற்படும் பயம் பற்றி, அவர்கள் என்னை விரும்புவார்களா மாட்டார்களா என்பது
பற்றி நான் கொள்ளும் பயம் பற்றி – என்னுடைய பயங்களை பார்க்க ஆரம்பித்தேன்.
இறுதியில் நான் வாழ்நாள் முழுவதும் பயத்திலேயேதான் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்ற
உண்மையை சந்தித்தேன். மற்றவர்கள் என்ன செல்வார்களோ என்ற பயம். நான் செய்தது
அனைத்துமே மற்றவர்களைப் பொறுத்ததுதான் என்பதை நான் உணர்ந்தேன். அவர்கள் அதை
அங்கீகரிப்பார்களா இல்லையா என்பதுதான் எனக்கு முக்கியமாக இருந்திருக்கிறது.

இது மனசோர்வையும் தாண்டியது. இது பயங்கரமானதாக இருந்தது. என்னால்
இதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. நான் என்ன செய்தாலும், எங்கே சென்றாலும்,
இது என்னுடைய முகத்தில், வயிற்றில், கால்களில் இருந்தது. நான் பயக்குழியில்
வாழ்வதாக எனக்கு தோன்றியது. அந்த குழி மிகவும் ஆழமானதாகவும் நான் அதிலிருந்து
வெளியே வர முடியப் போவதில்லை என்றும் தோன்றியது.

பின்பு….. சிலநாட்கள் கழித்து, (அது எத்தனை நாட்கள் கழித்து என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை,) பயம்
குறைந்துள்ளதை உணர்ந்தேன். மேலும் அது குறைந்துகொண்டே போவதையும் உணர்ந்தேன்.
மிகப்பெரிய மாறுதல் நிகழ்ந்தது, மின்னல் வெட்டியது என்றெல்லாம் என்னால் கூற
முடியாது. ஆனால் விழிப்புணர்வைப் பற்றி ஓஷோ கூறியதில் உள்ள உண்மையை நான் புரிந்து
கொண்டேன். அதை பார்ப்பது மட்டுமே போதுமானது. நீ வாழ்ந்து கொண்டிருக்கும் நரகத்தை
பார்த்து, நிஜமாகவே அதை உணர்ந்து, அதற்கு காரணம் நீதான், வேறு யாரும் காரணமல்ல
என்பதை நிதர்சனமாக உணர்ந்து கொண்டு, தன்னுணர்வோடு அதை வாழ்ந்து பார்க்கும்
போது…….. எத்தனை நாட்கள் உன்னால் அதை செய்ய முடியும்?  எத்தனை நாட்கள் நீ தொடர்ந்து நரகத்தில் வாழ்வதை
தன்னுணர்வோடு தேர்ந்தெடுப்பாய் ?

ஓஷோ கொடுத்துள்ள முக்கியமான விஷயத்தில் ஒன்றாகிய “நீ பார்ப்பதைப் பற்றி
மதிப்பீடு செய்யாதே” என்பதை பற்றிய விழிப்புணர்வு எனக்கு அப்போது இல்லை. நான்
என்னுள் பார்த்ததை நான் வெறுத்தேன். ஆகவேதான் அதை ஏற்றுக் கொள்ள எனக்கு
சிறிதுகாலம் பிடித்ததாக நான் நினைக்கிறேன். ஆனாலும் எனக்கு வேறுவழியில்லை,
பயத்தினூடே, பயத்தினால் நான் செயல்படுவதை தினமும் கவனமாக பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
இதுதான் விழிப்புணர்வில் உள்ள பிரச்னை, ஒருமுறை உன்னுடைய ஆழ்மனத்தில் நீ
தன்னுணர்வின்றி இருப்பதை பார்த்து விட்டால் பின் உன்னுடைய அறியாமைக்கு திரும்பி
போகவே முடியாது. எல்லாமும் மிகச் சரியாக போய்க் கொண்டிருக்கிறது என்று உன்னை
ஏமாற்றிக் கொள்ள முடியாது. இறுதியில் நான் இந்த பயத்துடன் மிகவும்
பழக்கப்பட்டுவிட்டேன். தானாகவே ஆமாம், நான் இப்படித்தான் என்னுடைய வாழ்க்கை
முழுவதும் வாழ்ந்திருக்கிறேன் என்று இதை ஏற்றுக் கொண்டுவிட்டேன். மேலும் இதை
இப்படி ஏற்றுக் கொண்டு விட்டதைப் பற்றிய விழிப்புணர்வு எனக்கு அப்போது இல்லையென்றாலும்
அதுதான் திருப்புமுனையாக அமைந்தது.

இந்த அனுபவம் பிற்காலத்தில் நான் குழுக்கள் செய்யும் சமயத்தில்
மக்களுடன் கலந்து பழகி அவர்களை சீர் செய்ய மிகவும் உதவியாக இருந்ததை பின்னால் நான்
கண்டேன். ஆழ்மனதில் உள்ள உணர்வை கண்டுகொள்ளும்போது அதிலிருந்து வெளியே மீளும் வழி
தெரியாத போது, அதை நீ ஏதும் செய்ய முடியாது என்பது உனக்கு தெரியும்போது, நான்
அவர்களை ஓஷோவின் இந்த யோசனையைத்தான் பின்பற்ற சொல்வேன். அவர்களுடைய இந்த நரக
உணர்வை எந்தவிதமான மதிப்பீடும் இல்லாமல் முழுமையான தன்னுணர்வோடு வாழ்ந்து பார்க்க
சொல்வேன்.  நீதான் அதை உருவாக்கி இருக்கிறாய், நீதான் அதை தேர்ந்தெடுத்திருக்கிறாய் என்பதை ஒத்துக் கொள்ளும்
தைரியம் கொள்ளச் சொல்வேன்.

நீ இதை உண்மையாகவே முழுமையாக செய்தால், நீ வெளியேற முயற்சி செய்து
கொண்டிருக்கிறாய் என்ற டிராமா அடித்து தொடர்ந்து தன் பிடிக்குள் உன்னை வைத்துக்
கொள்ள முயற்சி செய்யும் மனதை அனுமதிக்காமல், அதில் முழுமையாக வாழ்ந்து பார்த்தால்
பின் அந்த முழுமையாக வாழ்வதே போதுமானது. ஒருநாள் வரும், அது கூடியவிரைவில் வரும்,
எனக்கு நிகழ்ந்ததை விட சீக்கிரமாகவே நிகழும், ஏனெனில் நான் ஓஷோ சொன்னதில் உள்ள
பொருளை புரிந்துகொள்ளவில்லை…. அது தானாகவே போய்விடும் ஒருநாள் வரும். அது அங்கே
இல்லாமல் போய்விட்டது என்பதை நீ கவனிக்கக்கூட மாட்டாய், சிறிதுகாலம் சென்ற பின்னர்
நீ அது அங்கில்லை என்பதை உணர்வாய்.

உங்களுடைய பயத்தை மதிப்பீடு செய்யாமல், ஒய்வாக, மனதிற்கு வெளியே
நின்று பார்ப்பது மட்டுமே போதுமானதாகும். அப்போது விழிப்புணர்வு என்னும் ரசவாதம்
தனது வேலையை செய்ய ஆரம்பித்து விடும்.

Anando,    previously published in the   Italian osho times